அல் பத்ரியாவின் கல்வி நிலை பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் விசேடமாக சுhதாரண தர மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக முடியாத நிலை காணப்படுவதையும் கடந்த வாரம் ஊரில் பலர் அதிபரினதும் ஆசிரியர்களினதும் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். விசேடமாக ஆண் மாணவர்களது 2009ஆம் ஆண்டு பெறுபேறு மிகவும் மோசமாக இருப்பதால் ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலைக்கு பாடசாலை நிர்வாகம் தள்ளப்பட்டிருந்த நிலையில் பெற்றோர்களின் ஆதங்கமும் துரித நடவடிக்கையொன்றை எடுக்கக் காரணமாக இருந்ததாகத் தெரிய வருகின்றது.

கடந்த ஞாயிறு இரவு அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்துக்கு சாதாரண தர மாணவர்கள் அனைவரது பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர். கல்வி நிலை வீழ்ச்சியடைந்திருப்பதை அதிபரும் ஆசிரியர்களும் ஏற்றுக் கொண்ட போதிலும் அதற்கான முழுப் பொறுப்பையும் பாடசாலை நிர்வாகமோ ஆசிரியர்களோ ஏற்றுக் கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டனர். ஆண் மாணவர்கள் படிப்பில் ஆர்வமிலாமல் இருப்பதோடு படிக்கின்ற சில மாணவர்களுக்கு பெரும்பாலான மாணவர்கள் இடைஞ்சலாக இருப்பதையும் ஆசிரியர்கள் சுட்டிக் காட்டினர்.

இதற்குப் பரிகாரமாக இரவு நேர வகுப்புகளை ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஆண்மாணவர்கள் கட்டாயமாக இவற்றில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் மாணவிகள் கலந்து கொள்வதாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோர்களே ஏற்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இருக்கின்ற கொஞ்ச நாட்களில் இவ்வாறான ஊக்குவிப்பை மாணவர்களுக்கு வழங்குவதால் நல்ல ஒரு பெறுபேற்றைப் பெற முடியுமென ஆசிரியர்களும் பெற்றோரும் நம்புவதாகவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

June 17, 2010 at 4:04 am by Media Voice Of Kahatowita
Category: கல்வி